9 மே, 2011

உமர் பின் கத்தாப் (ரலி) அவர்களின் சிறப்புகள்.‏

உமர் (ரலி) (இறந்தவுடன்) கட்டிலில் கிடத்தப்பட்டிருந்தார்கள். அப்போது மக்கள், அவரைச் சுற்றிலும் (எல்லாப் பக்கங்களிலும்) சூழ்ந்து பிரார்த்திக்கலாயினர். அவரின் ஜனாஸா (சடலம்) எடுக்கப்படுவதற்கு முன்பாக அவருக்காக ஜனாஸாத் தொழுகை தொழலாயினர். அப்போது நான் அவர்களிடையே இருந்தேன். என் தோளைப் பிடித்துக் கொண்டிருந்த ஒருவர் தான் என்னை திடுக்கிடச் செய்தார். (யாரென்று திரும்பிப் பார்த்த போது) அது அலீ இப்னு அபீதாலிப் (ரலி) தாம். அவர்கள், 'உமர் அவர்களுக்கு அல்லாஹ் கருணை புரிவானாக!'' என்று பிரார்த்தித்துவிட்டு, '(உமரே!) உயரிய நற்செயலுடன் நான் அல்லாஹ்வைச் சந்திப்பதற்கு முன்மாதிரியாக, நான் விரும்பி ஏற்கத் தக்கவர் எவரும் உங்களுக்குப் பின்னால் இல்லை. (நீங்கள் தாம் அத்தகைய மனிதர்.) அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் உங்களை உங்கள் தோழர்க(ளான நபி - ஸல் - அவர்கள் மற்றும் அபூபக்ர் - ரலி - அவர்)கள் இருவருடனும் தான் (அவர்களின் மண்ணறைக்கு அருகில் தான்) அடங்கச் செய்வான் என்று எண்ணியிருந்தேன். ஏனெனில், நபி (ஸல்) அவர்கள், 'நானும் அபூபக்ரும் உமரும் (இங்கே) சென்றோம்'' என்றும் 'நானும் அபூபக்ரும் உமரும் (இந்த இடத்திற்கு) உள்ளே புகுந்தோம்'' என்றும் 'நானும் அபூபக்ரும் உமரும் புறப்பட்டோம்'' என்று சொல்வதை நான் நிறையச் செவியுற்றிருக்கிறேன் எனக் கூறினார்கள்.
புஹாரி : 3685 இப்னு அப்பாஸ் (ரலி).
1546. 'நான் உறங்கிக் கொண்டிருக்கும்போது கனவில் மக்களில் சிலரைப் பார்த்தேன். அவர்களின் மீது (பல விதமான) சட்டைகள் அணிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் என்னிடம் எடுத்துக் காட்டப்பட்டனர். அச்சட்டைகளில் சில அவர்களின் மார்பு வரை நீண்டிருந்தன. இன்னும் சில அதற்கும் குறைவாக இருந்தன. உமர் இப்னு கத்தாப் (தரையில்) இழுபடும் அளவு (நீண்ட) சட்டை அணிந்தவர்களாக என்னிடம் எடுத்துக் காட்டப்பட்டார்கள்' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறியபோது நபித்தோழர்கள், 'இறைத்தூதர் அவர்களே! (சட்டைக்கு) என்ன விளக்கம் தருகிறீர்கள்? எனக் கேட்டதற்கு 'மார்க்கம்' 'என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் விளக்கம் தந்தார்கள்''.
புஹாரி : 23 அபூ ஸயீதுல் குத்ரீ (ரலி) .
நான் உறங்கிக் கொண்டிருந்த வேளையில் (என்னுடைய கனவில்) ஒருபால்கோப்பை என்னிடம் கொண்டு வரப்பட்டது. உடனே (அதிலிருந்த பாலை நான்) தாகம் தீருமளவு குடித்து அது என்னுடைய நகக் கண்கள் வழியாக வெளியேறுவதைப் பார்த்தேன். பின்னர் மீதமிருந்ததை உமர் இப்னு கத்தாப் அவர்களுக்குக் கொடுத்தேன்' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறியபோது நபித் தோழர்கள் இறைத்தூதர் அவர்களே! அந்தப்பாலுக்குத் தாங்கள் என்ன விளக்கம் தருகிறீர்கள்?' என்று கேட்டதற்கு 'கல்வி' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்''.
புஹாரி: 82 இப்னு உமர் (ரலி).
நான் உறங்கிக் கொண்டிருந்தபோது (கனவில்) என்னை, வாளி தொங்கிக்கொண்டிருந்த ஒரு கிணற்றின் அருகே கண்டேன். அதிலிருந்து அல்லாஹ் நாடிய அளவிற்கு(த்தண்ணீர்) இறைத்தேன். பிறகு அபூ குஹாஃபாவின் மகன் (அபூபக்ர் அவர்கள்) அதை எடுத்துக் கொண்டு அதிலிருந்து ஒரு வாளி நீரை.. அல்லது இரண்டு வாளிகள் நீரை.. இறைத்தார். அவர் (சிறிது நேரம்) இறைத்தபோது சோர்வு தெரிந்தது. அல்லாஹ் அவரின் சோர்வை மன்னிப்பானாக! பிறகு, அது மிகப் பெரிய வாளியாக மாறிவிட்டது. அப்போது அதை கத்தா பின் மகன் உமர் எடுத்தார். உமர் இறைத்தைப் போன்று இறைக்கிற (வலிமை மிக்க) ஒரு புத்திசாலியான (அபூர்வத்) தலைவர் ஒருவரை மக்களில் நான் பார்த்ததில்லை. மக்கள் (தங்கள் ஒட்டகங்களுக்கு நீர் புகட்டி, நீர் நிலையருகே அவற்றின்) ஓய்விடத்தில் கட்டி வைக்கும் அளவிற்கு (அவர் நீர் இறைத்தார்.) என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி : 3664 அபூஹுரைரா (ரலி).
கனவில் இப்படி எனக்குக் காட்டப்பட்டது: நான் ஒரு சுற்றுச் சுவர் இல்லாத கிணற்றின் மீதிருந்த ஒரு வாளியால் தண்ணீர் இறைத்துக் கொண்டிருந்தேன். அப்போது அபூபக்ர் அவர்கள் வந்து ஒரு வாளி... அல்லது இரண்டு வாளிகள்... தண்ணீரை(சற்று) சோர்வான நிலையில் இறைத்தார்கள். அல்லாஹ் அவர்களை மன்னிப்பானாக! பிறகு உமர் இப்னு கத்தாப் அவர்கள் வந்தார்கள். உடனே அந்த வாளி மிகப் பெரிய வாளியாக மாறியது. (அவர் வலுவுடன் பல வாளிகள் தண்ணீர் இறைத்தார்.) அவரைப் போல் சீராகவும் உறுதியாகவும் செயல்படக் கூடிய புத்திசாலியான ஒரு (அபூர்வத்) தலைவரை நான் கண்டதில்லை. மக்கள் தாகம் தீர்ந்து, (தங்கள் ஒட்டகங்களுக்கும் நீர் புகட்டி, நீர் நிலையருகே அவற்றின்) ஓய்விடத்தில் கட்டிவைக்கும் அளவிற்கு (அவர் நீர் இறைத்தார்.) என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி : 3682 இப்னு உமர் (ரலி).
(ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள், '(கனவில்) 'நான் சொர்க்கத்தினுள் நுழைந்தேன்' அல்லது 'சொர்க்கத்திற்குச் சென்றேன்' அங்கு ஒரு மாளிகையைக் கண்டேன். நான், 'இது யாருடையது?' என்று கேட்டேன். அவர்கள் (வானவர்கள்), 'இது உமர் இப்னு கத்தாப் அவர்களுக்குரியது'' என பதிலளித்தார்கள். அந்த மாளிகைக்குள் நான் செல்ல நினைத்தேன். ஆனால், (உமரே!) உம்முடைய ரோஷம் குறித்து நான் அறிந்திருந்தது என்னை (உள்ளே செல்லவிடாமல்) தடுத்துவிட்டது'' என்று கூறினார்கள். (இதைக் கேட்ட) உமர் இப்னு கத்தாப் (ரலி), 'என் தந்தையும் என் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! தங்களிடமா நான் ரோஷம் காட்டுவேன், இறைத்தூதர் அவர்களே!'' என்று கேட்டார்கள்.
புஹாரி :5226 ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி).
நாங்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்து கொண்டிருந்தபோதுஅவர்கள், 'நான் தூங்கிக் கொண்டிருந்தபோது (கனவில்) என்னை சொர்க்கத்தில் கண்டேன். அப்போது (அங்கிருந்த) அரண்மனை ஒன்றின் பக்கத்தில் ஒரு பெண் (உலகில் இறைவணக்கம் புரிபவளாய் இருந்து வந்ததைக் குறிக்கும் வகையில் தன் அழகையும் பொலிவையும் இன்னும் அதிகரித்துக் கொள்ளவும்) உளூச் செய்து கொண்டிருந்தாள். நான், 'இந்த அரண்மனை யாருடையது?' என்று (ஜிப்ரீலிடம்) கேட்டேன். 'உமர் இப்னு கத்தாப் அவர்களுக்குரியது. ஜிப்ரீல் அவர்களும் மற்றும் அங்கிருந்த வானவர்களும்) பதிலளித்தார்கள். அப்போது எனக்கு உமரின் ரோஷம் நினைவுக்கு வந்தது. உடனே, அங்கிருந்து திரும்பிச் சென்று விட்டேன்'' என்று கூறினார்கள். இதைக் கேட்ட உமர் (ரலி) அழுதார்கள். பிறகு, 'இறைத்தூதர் அவர்களே! தங்களிடமா நான் ரோஷம் காட்டுவேன்?' என்று கேட்டார்கள்.
புஹாரி : 3242 அபூஹூரைரா (ரலி).
. (ஒருமுறை) அல்லாஹ்வின் தூதரிடம் (அவர்களின் மனைவிமார்களான) குறைஷிப் பெண்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். அந்தப் பெண்கள் நபி (ஸல்)அவர்களிடம் (ஜீவனாம்சத் தொகையை) அதிகமாகத் தரும்படி தம் குரல்களை உயர்த்தி கேட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது உமர் (ரலி) வந்து (உள்ளே வர) அனுமதி கேட்டார்கள். உமர் (ரலி) அனுமதி கேட்டபோது அப்பெண்கள் அவரச அவசரமாகத் தங்கள் பர்தாக்களை அணிந்தபடி எழுந்தனர். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சிரித்தபடியே உமர் (ரலி) அவர்களுக்கு (உள்ளே வர) அனுமதி கொடுத்தார்கள். உமர் (ரலி), 'இறைத்தூதர் அவர்களே! தங்களை ஆயுள் முழுதும் அல்லாஹ் சிரித்தபடி (மகிழ்ச்சியாக) இருக்கச் செய்வானாக'' என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், 'என்னிடமிருந்த இந்தப் பெண்களைக் கண்டு நான் வியப்படைகிறேன். (என்னிடம் சகஜமாக அமர்ந்திருந்தவர்கள்) உங்கள் குரலைக் கேட்டவுடன் அவரச அவசரமாகப் பர்தா அணிந்தார்களே'' என்றார்கள். உமர் (ரலி), 'எனக்கு அஞ்சுவதை விட அதிகமாக அஞ்சத் தாங்கள் தாம் தகுதியுடையவர்கள் இறைத்தூதர் அவர்களே!'' என்று கூறிவிட்டு, (அப்பெண்களை நோக்கி) 'தமக்குத் தாமே பகைவர்களாகி விட்ட பெண்களே! அல்லாஹ்வின் தூதருக்கு அஞ்சாமல் எனக்கா நீங்கள் அஞ்சுகிறீர்கள்?' என்று கேட்டார்கள். அதற்கு அந்தப் பெண்கள், 'ஆம், அல்லாஹ்வின் தூதருடன் ஒப்பிடும்போது நீங்கள் கடின சித்தமுடையவராகவும் அதிகக் கடுமை காட்டக்கூடியவராகவும் இருக்கிறீர்கள்'' என்று பதிலளித்தார்கள். (அப்போது) இறைத்தூதர் (ஸல்) அவர்கள், 'என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! (உமரே!) நீங்கள் ஒரு பாதையில் சென்று கொண்டிருக்கையில் உங்களை ஷைத்தான் கண்டால் உங்களுடைய பாதையல்லாத வேறொரு பாதையில் தான் அவன் செல்வான்'' என்று கூறினார்கள்.
புஹாரி :3294 ஸஅது பின் அபீவக்காஸ் (ரலி).
(நயவஞ்சகர்களின் தலைவர்) அப்துல்லாஹ் இப்னு உபை இறந்து விட்டபோது, அவரின் புதல்வர் அப்துல்லாஹ் இப்னு அப்தில்லாஹ் (ரலி), இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து தம் தந்தைக்குக் கஃபனிடுவதற்காக நபி (ஸல்) அவர்களின் சட்டையைக் கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் அவரிடம் தம் சட்டையைக் கொடுத்தார்கள். பிறகு அப்துல்லாஹ் (ரலி) தம் தந்தைக்கு (ஜனாஸாத்) தொழுகையை முன்னின்று நடத்தும்படி நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார். இறைத்தூதர் (ஸல்) அவர்களும் அவருக்கு (ஜனாஸாத்) தொழுகை நடத்துவதற்காக எழுந்தார்கள். உடனே உமர் (ரலி) எழுந்து இறைத்தூதர் (ஸல்) அவர்களின் ஆடையைப் பிடித்துக்கொண்டு, 'இறைத்தூதர் அவர்களே! இவருக்குத் தொழுகை நடத்த வேண்டாமென்று உங்களுடைய இறைவன் உங்களுக்குத் தடை விதித்திருக்க, இவருக்கா தொழுகை நடத்தப்போகிறீர்கள்!'' என்று கேட்டார்கள். அதற்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் , '(பாவமன்னிப்புக் கோரவும் கோராமலிருக்கவும்) எனக்கு அல்லாஹ் உரிமையளித்துள்ளான்'' என்று கூறிவிட்டு, '(நபியே!) நீங்கள் அவருக்காகப் பாவமன்னிப்புக் கோருங்கள்; அல்லது கோராமலிருங்கள். (இரண்டும் சமம்தான். ஏனெனில்,) அவர்களுக்காக நீங்கள் எழுபது முறை பாவமன்னிப்புக் கோரினாலும் சரி அவர்களை ஒருபோதும் அல்லாஹ் மன்னிக்கமாட்டான்'' என்று கூறுகிறான். நான் எழுபது முறையை விட அதிகமாக (இவருக்காகப்) பாவமன்னிப்புக் கோருவேன்'' என்று கூறினார்கள். உமர் (ரலி), 'இவர் நயவஞ்சகராயிற்றே!'' என்று கூறினார்கள். இருந்தும் நபி (ஸல்) அவர்கள் அவருக்கு (ஜனாஸாத்) தொழுகையை முன்னின்று நடத்தினார்கள். அப்போது உயர்ந்தோனான அல்லாஹ், 'அவர்களில் இறந்துவிட்ட எவருக்காகவும் (நபியே!) தொழுகை நடத்தாதீர். அவரின் மண்ணறை அருகேயும் நீங்கள் நிற்க வேண்டாம்'' எனும் (திருக்குர்ஆன் 09:84 வது) வசனத்தை அருளினான்.
புஹாரி : 4670 இப்னு உமர் (ரலி).

திருக்குர்ஆனில் இடம் பெற்றுள்ள பிரார்த்தனைகள்‏

رَبَّنَـا ظَلَمْنـَا أَنْفُـسَنَا وَإنْ لَّمْ تَغْفِـرْلَنَا وَتَرْحَمْنَـا لَنَكُـوْنَنَّ مِنَ الْخَاسِرِيْنَ
01. எங்கள் இறைவா! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம். நீ எங்களை மன்னித்து, கிருபை செய்யா விட்டால் நிச்சயமாக நாங்கள் நஷ்ட மடைந்தவர்களாகி விடுவோம்.

رَبِّ إنِّيْ أَعـُوْذُ بِكَ أَنْ أَسْـأَلَكَ مَا لَيْسَ لِيْ بِهِ عِلْمٌ وَإِلاَّ تَغْفِرْ لِيْ وَتَرْحَمْنِيْ أَكُنْ مِنَ الْخَاسِرِيْنَ
02. இறைவா! எனக்கு எதைப்பற்றி ஞானம் இல்லையோ அதை உன்னிடத்தில் கேட்பதை விட்டும் உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன். நீ என்னை மன்னித்து, எனக்கு அருள் புரியவில்லையானால் நஷ்டமடைந்தோரில் ஆகிவிடுவேன்

رَبِّ اغْفِرْ لِيْ وَلِوَالِدَيَّ وِلِمَنْ دَخَلَ بَيْتِيَ مُؤْمِنًا وَلِلْمُؤْمِنِيْنَ وَالْمُؤْمِنَاتِ
03. இறைவா! எனக்கும் என் பெற்றோருக்கும் என் வீட்டில் நம்பிக்கையாளர்களாகப் பிரவேசித்தவர்களுக்கும் முஃமினான ஆண்களுக்கும் முஃமினான பெண்களுக்கும் நீ மன்னிப் பளிப்பாயாக!.

رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيْعُ الْعَلِيْمُ، وَتُبْ عَلَيْنَا إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الرَّحِيْمُ
04. எங்கள் இறைவா! எங்களிடமிருந்து (நல்லறங்களை) ஏற்றுக்கொள்வாயாக! நிச்சயமாக நீயே யாவற்றையும் கேட்பவனும் அறிபவனுமாவாய். மேலும் நீ எங்களை மன்னித்தருள்வாயாக! நிச்சயமாக நீயே மன்னிப்பை ஏற்றுக் கொள்பவனும் கிருபை செய்பவனுமாவாய்.

رَبِّ اجْعَلْنِيْ مُقِيْمَ الصَّلاَةِ وَمِنْ ذُرِّ يَّـتِيْ رَبَّنَا وَتَقَبَّلْ دُعَاءِ
05. இறைவா! தொழுகையை நிலைநிறுத்துவோராக என்னையும் என்னுடைய சந்ததியிலுள்ளோரையும் ஆக்குவாயாக! எங்கள் இறைவா! (எங்கள்) பிரார்த்தனையையும் ஏற்றுக் கொள்வாயாக.

رَبَّنَا اغْفِرْ لِيْ وَلِوَالِدَيَّ وَلِلْمُؤْمِنِيْنَ يَوْمَ يَقُوْمُ الْحِسَابُ
06. எங்கள் இறைவா! என்னையும், என் பெற்றோர்களையும், முஃமின்களையும் கேள்வி கணக்குக் கேட்கும் (மறுமை) நாளில் மன்னிப்பாயாக!
رَبِّ هَبْ لِيْ حُكْمًاوَأَلْحِقْنِيْ بِالصَّالِحِيْنَ وَاجْعَلْ لِيْ لِسَانَ صِدْقٍ فِي اْلآخِرِيْنَ وَاجْعَلْنِيْ مِنْ وَرَثَةِ جَنَّةِ النَّعِيْمِ

07. இறைவா! நீ எனக்கு ஞானத்தை அளிப்பாயாக! மேலும் நல்லவர்களுடன் என்னைச் சேர்த்துவைப்பாயாக! மேலும் பின் வருபவர்களில் எனக்கு நீ நற்பெயரை ஏற்படுத்து வாயாக! மேலும் பாக்கியம் நிறைந்த சுவனபதியின் வாரிசுக் காரர்களில் ஒருவனாக என்னை ஆக்கிவைப்பாயாக!

رَبِّ هَبْ لِيْ مِنَ الصَّالِحِيْنَ
08. இறைவா! எனக்கு ஸாலிஹான (நற்குணமுடைய) மகனைத் தருவாயாக!

رَبَّنَا عَلَيْكَ تَوَكَّلْنَا وَإِلَيْكَ أَنَبْنَا وَإِلَيْكَ الْمَصِيْرُ
09. எங்கள் இறைவா! உன்னையே முற்றிலும் சார்ந்திருக்கிறோம். நாங்கள் உன்னையே நோக்குகிறோம். மேலும் உன்னிடமே எங்கள் மீளுதலும் இருக்கிறது.

رَبَّنَا لاَ تَجْعَلْنَا فِتْنَةً لِّلَّذِيْنَ كَفَرُوْا وَاغْفِرْ لَنَا رَبَّنَاإِنَّكَ أَنْتَ الْعَزِيْزُ الْحَكِيْمُ
10. எங்கள் இறைவா! நிராகரிப்பாளர்களுக்கு எங்களை சோதனைப் பொருளாக ஆக்கிவிடாதே! எங்கள் இறைவா! எங்களுக்கு மன்னிப்பு அருள்வாயாக! நிச்சயமாக நீயே மிகைத்தவன் ஞானம் மிக்கவன்.

رَبِّ أَوْزِعْنِيْ أَنْ أَشْكُرَ نِعْمَتَـكَ الَّتِيْ أَنْعَمْتَ عَلَيَّ وَعَلَى وَالِدَيَّ وَأَنْ أَعْمَلَ صَالِحًا تَرْضَاهُ وَأَدْخِلْنِيْ بِرَحْمَتِكَ فِيْ عِبَادِكَ الصَّالِحِيْنَ
11. இறைவா! என்மீதும் என்பெற்றோர் மீதும் நீ புரிந்துள்ள அருட்கொடைகளுக்காக நான் நன்றி செலுத்தவும் நீ பொருந்திக் கொள்ளும் விதத்தில் நான் நன்மைகள் செய்யவும் எனக்கு அருள்செய்வாயாக! மேலும் உன் கிருபையால் என்னை உன் நல்லடியார்களில் சேர்த்தருள்வாயாக!

رَبِّ هَبْ لِيْ مِنْ لَّدُنْكَ ذُرِّ يَّـةً طَـيِّـبَةً إِنَّكَ سَمِيْعُ الدُّعَاءِ
12. இறைவா! உன்னிடமிருந்து எனக்கு பரிசுத்தமான சந்ததியைக் கொடுத்தருள்வாயாக! நிச்சயமாக நீ பிரார்த்தனையைச் செவிமடுப்பவனாக உள்ளாய்.

رَبِّ لاَ تَذَرْنِيْ فَرْدًا وَأَنْتَ خَيْرُ الْوَارِثِيْنَ
13. இறைவா! நீ என்னை (சந்ததியில்லாமல்) ஒற்றையாக விட்டு விடாதிருப்பாயாக! நீயோ அனந்தரங் கொள்வோரில் மிக மேலானவன்.

لاَإِلَهَ إِلاَّ أَنْتَ سُبْحَانَكَ إِنِّيْ كُنْتُ مِنَ الظَّالِمِيْنَ
14. உன்னைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் யாருமில்லை. நீ மிகவும் தூய்மையானவன். நிச்சயமாக நான் அநியாயக்காரர்களில் ஒருவனாகி விட்டேன்.

رَبِّ اشْرَحْ لِيْ صَدْرِيْ وَيَسِّرْ لِيْ أَمْرِيْ وَأحْلُلْ عُقْدَةً مِّنْ لِّسَانِيْ يَفْقَهُوْا قَوْلِيْ
15. இறைவா! எனக்காக என் நெஞ்சத்தை நீ (உறுதிப் படுத்தி) விரிவாக்கித் தருவாயாக! என் காரியத்தை எனக்கு நீ எளிதாக்கியும் வைப்பாயாக! என் சொல்லை அவர்கள் விளங்கிக் கொள்வதற்காக என் நாவிலுள்ள (திக்குவாய்) முடிச்சையும் அவிழ்ப்பாயாக!

رَبِّ إِنِّيْ ظَلَمْتُ نَفْسِيْ فَاغْفِرْلِيْ
16. இறைவா! நிச்சயமாக நான் என் ஆத்மாவுக்கே அநியாயம் செய்து விட்டேன். ஆகவே நீ என்னை மன்னிப்பாயாக!

رَبَّنَا آمَنَّا بِمَا أَنْزَلْتَ وَاتَّبَعْنَا الرَّسُوْلَ فَاكْتُبْنَا مَعَ الشَّاهِدِيْنَ
17. எங்கள் இறைவா! நீ அருளிய (வேதத்)தை நாங்கள் நம்பினோம். (உன்னுடைய) தூதரை நாங்கள் பின்பற்றினோம். எனவே (சத்தியத்திற்கு) சாட்சி சொல்வோருடன் எங்களை பதிவு செய்து கொள்வாயாக!

رَبَّنَا لاَ تَجْعَلْنَا فِتْنَةً لِّلْقَوْمِ الظَّالِمِيْنَ وَنَجِّنَا بِرَحْمَتِكَ مِنَ الْقَوْمِ الْكَافِرِيْنَ
18. எங்கள் இறைவா! அநியாயம் செய்யும் மக்களின் சோதனைக்கு எங்களை ஆளாக்கிவிடாதே! நிராகரிக்கும் மக்களிடமிருந்து உன் அருளால் எங்களை நீ காப்பாற்றுவாயாக!

رَبَّنَا اغْفِرْ لَنَا ذُنُوْبَنَا وَإِسْرَافَنَا فِيْ أَمْرِنَا وَثَبِّتْ أَقْدَامَنَا وَانْصُرْنَا عَلَي الْقَوْمِ الْكَافِرِيْنَ
19. எங்கள் இறைவா! எங்கள் பாவங்களையும் எங்கள் காரியங்களில் நாங்கள் வரம்பு மீறிச்செய்தவற்றையும் மன்னித் தருள்வாயாக! எங்கள் பாதங்களை உறுதியாய் இருக்கச் செய்வாயாக! நிராகரிக்கும் கூட்டத்தாருக்கு எதிராக எங்களுக்கு நீ உதவி புரிவாயாக!

رَبَّنَا آتِنَا مِن لَّدُنْكَ رَحْمَةً وَهَيِّءْ لَنَا مِنْ أَمْرِنَارَشَدًا
20. எங்கள் இறைவா! நீ உன்னிடமிருந்து எங்களுக்கு அருள் செய்வாயாக! மேலும் நீ எங்களுக்காக எங்கள் காரியத்தை (பயனுள்ளதாக) சீர்திருத்தித் தருவாயாக!

رَبِّ زِدْنِيْ عِلْمًا
21. இறைவா! கல்வி ஞானத்தை எனக்கு அதிகப்படுத்துவாயாக!

رَبِّ أَعُوْذُ بِكَ مِنْ هَمَزَاتِ الشَّيَاطِـيْنِ وَأَعُوْذُبِكَ رَبِّ أَنْ يَحْـضُـرُوْنِ
22. இறைவா! ஷைத்தான்களின் தூண்டுதல்களிலிருந்து உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகிறேன். மேலும் அவை என்னிடம் நெருங்காமலிருக்கவும் இறைவா! உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகிறேன்.

رَبِّ إغْفِرْ وَارْحَمْ وَأَنْتَ خَيْرُ الرَّاحِمِيْنَ
23. இறைவா! என்னை மன்னித்துக் கிருபை செய்வாயாக! நீதான் கிருபையாளர்களில் மிகமேலானவன்.

رَبَّنَا آتِنَا فِيْ الدُّنْيَا حَسَنَةً وَفِي اْلآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ
24. எங்கள் இறைவா! எங்களுக்கு இவ்வுலகில் நற்பாக்கியங்களைத் தருவாயாக! மறுமையிலும் நற்பாக்கியங்களைத் தருவாயாக! எங்களை நரக வேதனையிலிந்து காத்தருள் வாயாக!

سَمِعْنَا وَأَطَعْنَا غُفْرَانَكَ رَبَّنَا وَإِلَيْكَ الْمَصِيْرُ
25. எங்கள் இறைவா! உன் அழைப்பை நாங்கள் செவிமடுத்தோம். உன் கட்டளைகளுக்கு வழிப்பட்டோம். உன்னிடமே மன்னிப்புக் கேட்கிறோம். நாங்கள் மீளுவதும் உன்னிடமே தான்.

رَبَّنَا لاَ تُؤَاخِذْنَا إِنْ نَّسِيْنَا أَوْ أَخْطَأْنَا رَبَّنَا وَلاَ تَحْمِلْ عَلَيْنَا إِصْرًا كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِيْنَ مِنْ قَبْلِنَا رَبَّنَا وَلاَ تُحَمِّلْنَا مَالاَ طَاقَةَ لَناَ بِهِ وَاعْفُ عَنَّا وأغْفِرْلَنَا وَارْحَمْنَا أَنْتَ مَوْلاَنَا فَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِيْنَ
26. எங்கள் இறைவா! மறந்து போயிருப்பினும் அல்லது தவறு செய்திருப்பினும் எங்களை குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்களுக்கு முன்சென்றோர் மீது சுமத்திய சுமையைப் போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கு அப்பாற்பட்ட சுமையை எங்கள்மீது சுமத் தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்துக் கொள்வாயாக! எங்களை மன்னித்தருள்வாயாக! எங்கள்மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன். நிராகரிக்கும் கூட்டத்தினரை (நாங்கள்வென்றிட) எங்களுக்கு உதவி செய்வாயாக!

رَبَّنَا لاَ تُزِغْ قُلُوْبَنَا بَعْدَ إِذْ هَدَيْـتَـنَا وَهَبْ لَنَا مِنْ لَّـدُنْكَ رَحْمَةً إِنَّكَ أَنْتَ الْوَهَّابُ
27. எங்கள் இறைவா! நீ எங்களுக்கு நேர்வழியை காட்டியபின் எங்கள் இதயங்களை (அதிலிருந்து) தவறுமாறு செய்து விடாதிருப்பாயாக! மேலும் நீ உன் புறத்திலிருந்து எங்களுக்கு நல்லருளை அளிப்பாயாக! நிச்சயமாக நீயே பெருங்கொடையாளன்.

رَبَّنَا مَا خَلَقْتَ هَذَا بَاطِلاً سُبْحَانَكَ فَقِنَا عَذَابَ النَّارِ رَبَّنَا إِنَّكَ مَنْ تُدْخِلِ النَّارَ فَقَدْ أَخْزَيْـتَهُ وَمَا لِلظَّالِمِيْنَ مِنْ أَنْصَارٍ رَبَّـنَا إِنَّنَا سَمِعْنَا مُنَادِيًا يُنَادِيْ لِلإْيـمَانِ أَنْ آمِنُوْا بِرَبِّكُمْ فَآمَنَّا رَبَّـنَا فَاغْفِرْلَنَا ذُنُوْبَنَا وَكَفِّرْ عَنَّا سَـيِّـئَاتِنَا وَتَوَفَّـنَا مَعَ اْلأَبْرَارِ رَبَّـنَا وَآتِنَا مَا وَعَدْتَّـنَا عَلَى رُسُلِكَ وَلاَتُخْزِنَا يَوْمَ الْقِيَامَةِ إِنَّكَ لاَتُخْلِفُ الْمِـيْعَادَ
28. எங்கள் இறைவா! (வானம், பூமி ஆகிய) இவற்றையெல்லாம் நீ வீணாகப் படைக்கவில்லை. நீ மிகத்தூயவன். நரக வேதனையிலிருந்து எங்களைக் காத்தருள்வாயாக! எங்கள் இறைவா! நீ எவரை நரகநெருப்பில் புகுத்துகிறாயோ அவரை நிச்சயமாக நீ இழிவாக்கிவிட்டாய். மேலும் அக்கிரமக்காரார்களுக்கு உதவி செய்வோர் எவருமில்லை. எங்கள் இறைவா! உங்கள் இறைவன் மீது நம்பிக்கை கொள்ளுங்கள்! என்று ஈமானின் பக்கம் அழைத்தவரின் அழைப்பைச் செவிமடுத்து நாங்கள் திடமாக ஈமான் கொண்டோம். எங்கள் இறைவா! எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! எங்கள் தீமைகளை எங்களை விட்டும் அகற்றி விடுவாயாக! எங்களுடைய ஆத்மாக்களைச் நல்லோரின் ஆன்மாக்களுடன் கைப்பற்றுவாயாக! எங்கள் இறைவா! உன் தூதர்கள் மூலம் எங்களுக்கு வாக்களித்ததை எங்களுக்குத் தந்தருள்வாயாக! கியாமநாளில் எங்களை இழிவு படுத்தாதிருப்பாயாக! நிச்சயமாக நீ வாக்குறுதிகளில் மாறுபவன் அல்ல.

رَبنَّاَ آمَنَّا فَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا وَأَنْتَ خَيْرُ الرَّاحِمِيْنَ
29. எங்கள் இறைவா! நாங்கள் உன் மீது ஈமான் கொள்கிறோம். நீ எங்கள் குற்றங்களை மன்னித்து, எங்கள் மீது கிருபை செய்வாயாக! கிருபையாளர்களில் நீ மிகமேலானவன்.

رَبَّنَا اصْرِفْ عَنَّا عَذَابَ جَهَـنَّمَ إِنَّ عَذَابَهَا كَانَ غَرَامًا إِنَّهَا سَاءَتْ مُسْـتَـقَرًّا وَمُقَامًا
30. எங்கள் இறைவா! எங்களை விட்டும் நரக வேதனையை திருப்புவாயாக! நிச்சயமாக அதன் வேதனை நிரந்தரமானதாகும். நிச்சயமாக அது வாழ்வதற்கும் வசிப்பதற்கும் மிகக் கெட்ட இடமாகும்.

رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّ يَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِيْنَ إِمَامًا
31. எங்கள் இறைவா! எங்கள் மனைவியரிடமும் எங்கள் சந்ததிகளிடமிருந்தும் எங்களுக்கு கண்களின் குளிர்ச்சியை அளிப்பாயாக! மேலும் பயபக்தியுடைய வர்களுக்கு எங்களை வழி காட்டியாக ஆக்குவாயாக!

رَبِّ أَوْزِعْنِيْ أَنْ أَشْكُرَ نِعْمَتَكَ الَّتِيْ أَنْعَمْتَ عَلَيَّ وَعَلَى وَالِدَيَّ وَأَنْ أَعْمَلَ صَالِحًا تَرْضَاهُ وَأَصْلِحْ لِيْ فِيْ ذُرِّيَّتِيْ إِنِّيْ تُبْتُ إِلَيْكَ وَإِنِّيْ مِنَ الْمُسْلِمِيْنَ
32. இறைவா! என் மீதும் என் பெற்றோர் மீதும் நீ புரிந்த அருட்கொடைகளுக்காக நன்றி செலுத்தவும் உன் திருப்பொருத்தத்தை அடையக்கூடிய நல்லறங்களைச் செய்யவும் எனக்கு அருள்புரிவாயாக! எனது சந்ததியரையும் (நல்லவர்களாக) சீர் படுத்துவாயாக! நிச்சயமாக நான் உன்பக்கமே திரும்புகிறேன். மேலும் நிச்சயமாக நான் உனக்கு முற்றிலும் கட்டுப்படுபவனாக உள்ளேன்.

رَبَّنَا اغْفِرْ لَنَا وَِلإِخْوَانِنَا الَّذِيْنَ سَبَقُوْنَا بِاْلإِيْمَانِ وَلاَتَجْعَلْ فِيْ قُلُوْبِنَا غِلاًّ لِّـلَّذِيْنَ آمَنُوْا رَبَّنَا إِنَّكَ رَءُوْفٌ رَّحِيْمٌ
33. எங்கள் இறைவா! எங்களுக்கும், ஈமான் கொள்வதில் எங்களுக்கு முந்தியவர்களான எங்கள் சகோதரர்களுக்கும் மன்னிப்பு அளிப்பாயாக! மேலும் ஈமான் கொண்டவர்களைப்பற்றி எங்களுடைய இதயங்களில் பகையை ஆக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா! நிச்சயமாக நீ மிக இரக்கமுடையவன், கிருபைமிக்கவன்.

رَبَّنَا أَتْمِمْ لَنَا نُوْرَنَا وَاغْفِرْلَنَا إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ
34. எங்கள் இறைவா! எங்களுக்கு எங்களுடைய பிரகாசத்தை நீ முழுமையாக்கி வைப்பாயாக! எங்களுக்கு மன்னிப்பும் அருள்வாயாக! நிச்சயமாக நீ எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றல் உடையவன்.

رَبَّنَا إِنَّنَا آمَنَّا فَاغْفِرْ لَنَا ذُنُوْبَنَا وَقِنَا عَذَابَ النَّارِ
35. எங்கள் இறைவா! நிச்சயமாக நாங்கள் (உன்?? மீது) நம்பிக்கை கொண்டோம். எங்களுக்காக எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! நரக வேதனையிலிருந்து எங்களை காப்பாற்றுவாயாக!

رَبَّنَا آمَنَّا فَاكْتُبْنَا مَعَ الشَّاهِدِيْنَ
36. எங்கள் இறைவா! நாங்கள் (இவ்வேதத்தின் மீது) நம்பிக்கை கொண்டோம். எனவே (இவ்வேதம் சத்தியமானது என்று) சாட்சி கூறுவோருடன் எங்களையும் நீ பதிவு செய்து கொள்வாயாக!